Wednesday, 1 January 2020

2020

ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே போன்ற புத்தாண்டு ஒன்றை நான் எதிர் கொண்டேன். 
பிடிக்காத ஒரு வேலையில் இருந்து கொண்டு அதன் மனஉளைச்சலுடன் அலுவலகத்தில் பொய் சொல்லி விடுப்பு எடுத்து தனியாக இருந்த புத்தாண்டு அது.

அதே போல தான் இந்த புத்தாண்டும். நேற்று மாலை அலுவலகம் விட்டு ரூமிற்கு வர ரயில் எறிவிட்டு நான் அன்று எழுதிய பதிவை வாசித்தேன். நான் எவ்வளவு மாறிவிட்டேன் என தோன்றியது. கையில் ஒன்றுமே இல்லாத பொழுது இருந்த பிரபு மித்ரன் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பொழுது அவனை தேடி அழைகிறேன்.

மகாபலிபுரம் போகலாம், ரிசார்ட் இருப்பதாக நண்பர்கள் அழைத்தனர். இன்னொரு நண்பன் இரவு கடற்கரை போகலாம் என்றான். அண்ணன் ஒருவர் ஸ்காட்ச் வாங்கி வைத்திருக்கிறேன் வீட்டுக்கு வா என்றார். திராவிடர் கழகம் நடத்தும் புது வருட நிகழ்ச்சி பெரியார் திடலில் நடப்பதாக அழைப்பு வந்தது. எதற்கும் போகாமல் ரூமிற்கு வந்து படுத்தேன். அடுத்த நாள் அலுவலகம் போக வேண்டுமே என்று கவலை இருந்தது. ஒரு தமிழ் படத்தை செல்போனில் பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டேன்.

நாடே கொண்டாடிக் கொண்டிருந்த பொழுது நான் ரூமில் தனிமையின் அமைதியில் தூங்கிக்கொண்டிருந்தேன். காலை விடிந்தவுடன் அலாரம் அடித்து எழுப்பியது.

எழுந்தேன்.
மழை பெய்து கொண்டிருந்தது.
இன்று அலுவலகம் வரவில்லை என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இரவு பாதி பார்த்த படத்தை பார்த்து முடித்தேன்.

எழுந்து குளித்துவிட்டு வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வந்து பூமணி எழுதிய வெக்கை நாவலை எடுத்துக்கொண்டு பால்கனி சென்று அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.

ஏற்கனவே அசுரன் பார்த்துவிட்டதால் அதன் முகங்களே முன்னாள் வந்து நின்றது. இரண்டு அத்தியாயங்களை படித்துவிட்டு குட்டியாக கொஞ்சம் தூங்கினேன். 

எழும் பொழுது திரும்பவும் மழை.
இன்னொரு தமிழ்ப்படத்தை செல்போனில் பார்த்து முடித்தேன். மகாபலிபுரம் சென்ற நண்பர்கள் ரூமிற்கு வந்து சில்லு கருப்பட்டி என்ற சினிமாவிற்கு அழைத்தனர். முதலில் வரவில்லை என்றேன். அழுத்தி அழைக்கவும் சென்றேன். நல்ல முடிவு என்பதை படம் பார்க்கும் பொழுது தோன்றியது. சந்தோஷமாக பார்த்தேன்.

திரும்பி வந்து வெக்கை நாவலை எடுத்து இன்னும் இரண்டு அத்தியாயங்கள் படித்தேன்.

பிறகு ஒரு சிரிப்பு நிகழ்ச்சியை யூடியூபில் பார்த்து நன்றாக சிரித்தேன். 

திரும்பவும் வெளியே மழை.

பல வருடம் கழித்து இன்று புத்தகம், சினிமா, மழை என எனக்கு பிடித்தபடி மூன்றுடன் இருந்திருக்கிறேன்.

அலுவலகம் சென்றிருந்தால் மற்றுமொரு நாளாக இது கடந்திருக்கும். என்ன செய்வது! எனக்கு பிடித்த எதற்கும் பணம் சம்பந்தம் இல்லை. பணம் கிடைக்கும் இடமெதுவும் எனக்கு பிடிப்பதில்லை. அது தான் இன்னும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறதென நினைக்கிறேன்.

பிரபு மித்ரன்



No comments:

Post a Comment

Related Articles