சென்னை வந்ததிலிருந்து விடுமுறை தினங்களில் எப்பொழுதும் அறையில் இருக்க மாட்டேன். எங்காவது கிளம்பிவிடுவேன். இந்த சனிக்கிழமை எங்கும் செல்லவில்லை. காலையிலிருந்து அறையிலேயே 'தேமே' வென உட்காந்திருந்தேன். மாலை போல பெரியார் திடல் சென்று எனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றை வாங்கலாம் என தோன்றியது. அங்கு மட்டும் தான் அது கிடைக்கும். அப்படியும் ரயில் பிடித்து அந்த கூட்டத்தில் அவ்ளோ தூரம் போக சோம்பேறித்தனம்.
அறையில் என் நண்பன் மத்தியானமாக எழுந்து என்னை அறையிலேயே பார்த்ததும் ஆச்சரியமாக "என்னடா ரூம்லயே இருக்கே?" என்றான்.
சிரித்துவிட்டு 'ஆமா, நீ எங்காவது போறியா இன்னைக்கு?" என்றேன்.
"எங்கேயும் இல்லே.. ரூம்ல தான்"
"திரிசூல மலைக்கு போலாமா? ரொம்ப நாளா லிஸ்ட்ல இருக்கு. அந்த கல்குவாரியும் பாக்கணும்"
யோசித்துவிட்டு "சாயந்திரமா போலாமா"
"அப்டியே நைட் பீச் க்கு போய்ட்டு வரலாம்."
"சூப்பர்டா. போலாம்"
எனக்கு அப்பவே தெரியும் அவன் பீச்சுக்கு மட்டும் தான் வருவான் என்று. எல்லாருக்கும் புது இடங்களின் மீது அவ்வளவு ஈர்ப்பு இருப்பதில்லை. ஏற்கனவே பல முறை பார்த்த பழைய இடங்களுக்கே ஒவ்வொரு வருடமும் சுற்றிலா செல்லும் குடும்பங்களை பார்க்கிறேன். வாரம் தவராமல் பீச்சுக்கு மட்டும் செல்பவர்களை நான் எதுவும் தப்பு சொல்லவில்லை. சென்னையில் கடற்கரைகளே பல இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த இடமும் கடைகளும் மனிதர்களும் அங்கு கிடைக்கும் தின்பண்டங்களும் ஒவ்வொரு கடற்கரைக்கும் மாறும்.
இரவு பத்து மணி இருக்கும்.
திருவான்மியூர் கடற்கரை.
நாங்கள் இருவரும் மணலில் இறங்கி கடல் கரையை தொடும் இடம் நோக்கி நடந்தோம். அவனுக்கு தெரிந்த இருவர் இன்னும் வந்துகொண்டிருந்தனர். நாங்கள் கடல் பக்கத்தில் செல்லும் பொழுது கொஞ்ச தூரத்தில் சிலர் கூட்டமாக நின்று குனிந்து பார்த்துக்கொண்டிருந்தனர். யாரோ டார்ச் அடித்துக்கொண்டு மணலில் ஏதோ செய்துகொண்டிருந்தார்.
"அங்கே என்னடா செய்றாங்க?" என்றான்.
"என்ன செய்ய போறாங்க. மணல் வீடு ஏதாவது கட்டிட்டு இருப்பாங்க"
"இல்லடா வேறே ஏதோ பண்றாங்க"
"அப்படியா! வா போய் பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு நடந்தேன்.
பக்கத்தில் சென்று கூட்டத்தை கிழித்துக்கொண்டு தலையை உள்ளே விட்டு பார்த்தோம். அங்கு இரண்டு அடிக்கு ஒரு குழி தோண்டப்பட்டிருத்ததுகுரங்கு குல்லா அணிந்த மனிதர் ஒருவர் அங்கு உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் ஒடிசலாக டவுசர் போட்டுக்கொண்டு வளைந்த முதுகோடு குத்துக்கால் போட்டு கையில் பாலித்தீன் பய் ஒன்றை பிடித்துக்கொண்டு ஒருவர் உட்கார்ந்திருந்தார். எல்லோரும் செல்போனில் டார்ச் அடித்ததால் வெளிச்சமாக இருந்தது. அப்பொழுது தான் கவனித்தேன். அந்த குரங்கு குல்லா மனிதர் தனது கையில் வலைப்பையை பிடித்திருந்தார். அது முழுவதும் வெள்ளை நண்டுகள். அதன் கால்கள் எல்லாம் வலையின் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தன. அதனுள் கையை விட்டு ஒரு நண்டை எடுத்து இன்னொரு மனிதர் பிடித்திருந்த பாலித்தீன் பையில் உள்ளே போட்டார். அடுத்த நண்டை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன் அத்தனை நண்டுகளும் உயிருடன் இருக்கின்றன. பேரம் பேசி அந்த இரண்டு நண்டுகளை கொசுராக சேர்த்து ஒரு மனிதர் காசுகொடுத்து அந்த பாலித்தின் பையை வாங்கிக்கொண்டு போனார்.
கூட்டத்தை விட்டு வெளியே வந்தோம்.
அங்கு கண்ணுக்கு எட்டிய வரை ஒவ்வொரு இடைவெளிக்கும் அப்பொழுது தான் தோண்டப்பட்ட குழி இருந்தது.
"நண்டுக்கு பொறி வச்சு புடிச்சுருக்காங்க" என்றான்
நான் இருக்காது, மணலை தோண்டி தான் பிடித்திருப்பார்கள் என்றேன்.
அந்த இருவரும் எழுந்து டார்ச்சை அடித்துக்கொண்டு எதிர் திசையில் இருட்டை நோக்கி கரை ஓரத்தில் நடந்தனர். கூடவே சில பேர் சென்றனர். நான் "வா, எப்படி பிடிக்குறாங்கனு பாக்கலாம்" என அழைத்துச் சென்றேன்.
ஏற்கனவே கடற்கரைகளில் கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த நண்டுகள் அலைகளையும் கரை மணலையும் தொட்டு விளையாடிவிட்டு விருட்டென அங்கே பள்ளம் தோண்டி மணலுக்குள் போய்விடும். நான் ஒரு முறை அதை பிடித்துவிடலாம் என கைகளால் தோண்டினால் அது சென்ற தடமே இல்லை.
அந்த குல்லாக்காரர் அதை போன்ற நண்டு தோண்டிய பொந்துகளை பார்த்தவாறு சென்று அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கையில் வைத்திருக்கும் மன்வெட்டுயால் பரபரவென தோண்டுகிறார். முதல் ஓரடிக்கு எந்த தடமுமில்லை. அதன் பிறகு தோண்ட பெரிய பொந்து அடியில் செல்வது தெரிகிறது. உடனே மண்வெட்டியை கிழே போட்டுவிட்டு மணலில் படுத்து அந்த பொந்துக்குள் கையைவிட்டு கொஞ்ச நேரம் சிரமப்படுகிறார். அவர் அதிலிருந்து எழுந்து உட்காரும் பொழுது கைகில் ஓரளவு பெரிய நண்டு இருக்கிறது. கூட்டம் ஆர்பரிக்கிறது.
பிடித்த நண்டை தனது கால் கட்டவிரளின் அடியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு கொடுக்கை முறிக்கிறார். அந்த நண்டுக்கு ஒரு கொடுக்கு சின்னதாகவும் இன்னொன்று பெரியதாகவும் இருக்கிறது. சின்னதாக இருக்கும் கொடுக்கிலிருந்து அதன் நகத்தை முறித்து எடுத்து பெரிய கொடுக்கின் நகக்கண்ணில் அழுத்தி குத்தி வைக்கிறார். அதன் பிறகு அந்த பெரிய கொடுக்கின் வாயை அந்த நண்டால் விரிக்க முடியாது.
"ஏன் ஒரு கொடுக்கை மட்டும் முறிக்குறீங்க?" என கேட்டோம்.
"அது ரெண்டையும் முறிச்சா செத்துப்போடும். அப்பறம் வாங்கிட்டு போய் சமைக்க நல்லா இருக்காது" என சொன்னார்.
நான் நண்பனிடம் அவர்களுடன் கொஞ்ச தூரம் போகிறேன் என சொல்லிவிட்டு அவர்களுடன் சென்றேன்.
வேறு வேறு கூட்டம் கூடவே வந்துகொண்டிருந்தது. பார்த்துவிட்டு கலைந்த பிறகு அடுத்தது வந்தது.
"எல்லா நாளும் இங்க நண்டு பிடிப்பீங்களா?" என கூடவே அந்த டார்ச் பிடித்துக்கொள்ளும் ஓடிசலானவரிடம் கேட்டேன்.
"வாரத்துல ஒரு நா வருவோம். சில சமயம் ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் வருவோ"
அவர் அடுத்த நண்டை பிடித்திருந்தார்.
கட்டை விரலில் வைத்து அழுத்தி பிடிக்கும் பொழுது பார்த்தேன். நண்டுடைய கண்கள் தனியாக வெளியே எழுந்து நின்றுகொண்டிருந்தது. அது பயந்தால் அப்படி ஆகுமோ என்னவோ.
"இத பகல்ல புடிக்க முடியாதா" என ஒருவர் கேட்டார்.
"நைட்டு தான் நிறையா மாட்டும். பகல்ல அவ்ளோ எல்லாம் புடிக்க முடியாது"
ஒரு குடும்பம் குழந்தைகளை கூட்டிக்கொண்டு காட்டிக்கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் வித விதமான சத்தங்களுடன் கத்திக்கொண்டிருந்தனர்.
அந்த குல்லாக்காரர் அப்பொழுது பிடித்த நண்டை எடுத்து குழந்தைகளிடம் நீட்டினார். எல்லோரும் அலறி சிதரினர். பயங்கரமாக வெடித்து சிரித்தனர்.
கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு அவர்களுக்கு டார்ச் அடிக்கும் ஆளாக ஆகியிருந்தேன். நண்டு பிடித்தபடி சென்றோம்.
வெளிச்சம் இல்லாத இருட்டான பகுதியை அடையும் பொழுது அங்கு நாங்கள் மூன்று பேர் தான் சென்றுகொண்டிருந்தோம். கூட்டம் யாருமில்லை.
"அது ஏன் சனிக்கிழமை மட்டும் பிடிக்குறீங்க? மத்த நாள் என்ன பண்ணுவீங்க"
குழிக்குள் இருந்து அவர் நண்டை பிடித்து எழுந்தபடி பதில் சொன்னார்.
"கம்பெனில வேலை செய்வோம். ஞாயத்துகெழமை சும்மா இருக்கனும்லே. அதான் சனிக்கெழமை புடிப்போம்."
"கம்பெனியா? என்ன கம்பெனி"
"ஸ்டீல் கம்பெனி. அங்க தான் வேலை"
அவர் பொந்துகளை கவனித்து அது எந்த திசையில் குடையபட்டுள்ளது என்பதை பார்த்து அதன் திசையில் மண்வெட்டியை போடுகிறார். ஆனால் சில பொந்துகளையே அவர் தேர்ந்தெடுக்கிறார்.
"அது எதனால ண்ணா இந்த குழில எல்லாம் தோண்ட மாட்டேங்குறீங்க?"
"அது சைடுல ஓட்டை போட்டுருக்கு. அப்படி போட்டிருந்தா நண்டு மாட்டாது. அது உள்ளுக்குள்ளேயே நாலஞ்சு ஓட்டையை கண்ணா பின்னானு போட்டுருக்கும். அப்பறம் தோண்டியும் பிரயோஜனம் இல்லாம பூடும்..
ஓட்டை நேரா போட்டிருந்தா கண்டிப்பா மாட்டிக்கிடும். அப்பறம் நெறய குழி பக்கத்துல பக்கத்துல இருந்தாலும் நண்டு மாட்டாது" என சொல்லிவிட்டு நேராக போட்டிருந்த பொந்தை தொண்டினார். ஒரு நண்டு வெளியே வந்து திரும்பவும் உள்ளே ஓடியது.
"குட்டியோட இருக்கு" என சொல்லிவிட்டு கையைவிட்டு தேடி பெரிய நண்டை மட்டும் எடுத்து கொடுக்கை முறித்து சொருகினார்.
"இப்படி பண்ணுனா அதனால கடிக்க முடியாதா?".
"இனி கடிக்காது. அதான் மூக்கு குத்தியாச்சுல்லே"
அந்த நகத்தை பிடுங்கி இன்னொரு கொடுக்கில் சொருகுவதை மூக்கு குத்துவது என்கிறார்கள். அடுத்த நண்டுக்கு அவர் குத்தும் பொழுது எனக்கு நண்டின் கொடுக்கு அதன் மூக்கு என்பது போலவே தோன்றியது.
"இந்த நண்டை என்ன செய்யுவீங்க?"
"எப்பவும் இங்கேயே நல்லா விக்கும். இன்னைக்கு நா லேட்டா வந்துட்டேன். தொள்ளாயிர ரூவாக்கு தான் வித்துச்சு. இனி கிடைக்குறதே நாளைக்கு மார்கெட்டுல குடுத்துடுவோம்"
"மார்கெட்டுல இங்க விட கம்மியான விலைக்கு தான் போகுமா?"
"அதே வெல தான். இங்க கொசுறு ரெண்டு போட்டா போதும். அங்க இன்னும் அதிகமா கேட்பாங்க" என சிரித்தார்.
"நீங்களே மார்க்கெட்ல விப்பீங்களா?"
"என் பெரிமா, அத்தையெல்லாம் இருக்காங்க. அவங்ககிட்ட குடுத்துடுவேன்."
அவர் ஒரு குழியிலிருந்து நண்டை எடுத்து அவசர அவசரமாக அதற்கு மூக்கு குத்திவிட்டு டக்கென பக்கத்தில் கையிலேயே குழி பறித்து அந்த நண்டை போட்டு மண்ணை மூடிவிட்டு திரும்பவும் குழிக்குள் கையைவிட்டு தேடி இன்னொரு நண்டை எடுத்தார். பிறகு அதற்கும் மூக்கு குத்திவிட்டு இன்னொன்றையும் மண்ணை பறித்து எடுத்து இரண்டையும் பையில் போட்டார்.
"நாளைக்கு வரைக்கும் இதெல்லாம் உயிரோட இருக்குமா?"
அவர் சிறுவனை பார்த்து சிரிப்பது போல சிரித்துவிட்டு "இன்னும் ரெண்டு நாளைக்கு இருக்கும்." என்றார்.
இடையில் ஒரு குடிகாரர் கையில் பார்சல் சாப்பாட்டோடு வந்து நின்று கொண்டு "நல்லா தோண்டு. ரெண்டு மாம்பட்டி போடு. என்ன தோண்டுறெ. ஹா.. அவ்ளோதான். புடிச்சாச்சு" என சொல்லி கடமை முத்த கையோடு ஆடிக்கொண்டே சென்றார்.
"உங்க பேரு ண்ணா?"
"சுனில் குமார்"
கூட இருப்பவரிடம் கேட்டேன். ரவிக்குமார் என்றார்.
"இன்னும் எவ்ளோ நேரத்துக்கு ண்ணா புடிப்பீங்க?"
"அப்படியே புடிச்சுட்டே போனோம்னா ஊட்டுக்கு போயிடுவோம். ஊடு இங்க தான்" என இருட்டில் கை காமித்தார். தூரத்தில் பல வீடுகள் லைட் எரிந்து கொண்டிருந்தன.
அப்பொழுது தான் கவனித்தேன். அலை தொடும் இடமெல்லாம் பெரிய பெரிய நண்டுகள். அத்தனை நண்டுகளை நான் பார்த்ததே இல்லை. அனைத்தும் விளையாடிக் கொண்டிருந்தன. இங்கு நாங்கள் அதன் வீடு புகுந்து அவர்களின் ஆட்களை தூக்கிக்கொண்டிருக்கிறோம்.
"இந்த குழில எல்லாம் ஒரு நண்டு தான் இருக்குமா ண்ணா?"
"இது ஈர மண்ணு. இதுல இப்போ தான் உள்ள போயிருக்கும். அதனால் ஒன்னு தான் இருக்கும். காஞ்ச மணல்ல இருக்குற குழில தான் ரெண்டு கிடைக்கும். அதுக எப்பவும் ஜோடியாதான் இருக்கும். புருஷன் பொண்டாட்டி மாதிரி."
சொல்லிவிட்டு
"நண்டு வேணுமா" என்றார்.
"எனக்கு சமைக்கவே தெரியாது ண்ணா. நான் வாங்கிட்டு போய் என்ன பண்றது. நான் சமைக்க ஆள் ரெடி பண்ணிட்டு வந்து வாங்கிக்குறேன்" என்றேன்.
"சமைக்க தெரியாதா?" என சிரித்தார். சிரித்துவிட்டு "இந்த நண்டு கொழந்தைககுக்கு ரொம்ப நல்லது. சளி.. இருமல் எல்லாம் போயிரும். கடல் நண்டை விட இது தான் நல்லது"
"அப்போ இது கடல் நண்டு இல்லையா? இது என்ன அப்போ?"
"வெள்ளி"
அலையின் சத்தத்தில் எனக்கு புரியலை. "என்ன நண்டு ண்ணா?" என மறுபடியும் கேட்டேன்.
அவர் வானத்தை காமித்துவிட்டு "வெள்ளினு சொல்லுவோம்ல. அந்த நண்டு.
வெள்ளி நண்டு. இங்க ஓரத்துலயே தான் இருக்கும்."
அடுத்த குழிக்கு சென்று தொண்டினோம்.
"உங்களை இது கடிக்காதா?"
"அது கரெக்ட்டா புடிச்சுடுவேன். ஒன்னு ரெண்டு கடிக்கும். இப்போ அலுப்புல தெரியாது. காலைல கையெல்லாம் பயங்கரமா எரியும். மஞ்சப்பத்து போடணும்"
இந்த கேள்வியை எப்படியும் நான் கேட்டுவிடுவேன் என தெரியும். கேட்டேன்
"உங்களுக்கு கம்பெனி வேலை புடிச்சுருக்கா? இல்லை இந்த வேலை புடிச்சுருக்கா?"
அழுத்தமாக "கம்பெனி வேலை தான்" என்றார்
"கம்பெனி வேலையா?" நான் வேறு எதிர் பார்த்தேன்.
"ஆமா. அங்க நான் மேஸ்திரியா இருக்கேன். 900 ரூவா சம்பளம்." அவ்வளவு பெருமையாக சொன்னார்.
"நீங்க எங்க வேலை பாக்குறீங்க" என்னை கேட்டார்.
"நான் செங்கல்பட்டுக்கிட்ட வேலை பாக்குறேன் ண்ணா" என்றேன்.
"எங்க இருக்கீங்க?"
"தாம்பரத்துல"
"எப்படி வந்தீங்க?"
"பைக்குல"
பேசிக்கொண்டிருந்த பொழுதே நான் ஒரு குழிக்குள் பெரிய நண்டு ஒன்று உள்ளே செல்வதை பார்த்தேன்.
ஓடிச் சென்று "அண்ணா இதுல தோண்டுங்க. இப்போ தான் நண்டு போச்சு" என்றேன்.
அவரும் வேகமாக தொண்டினார். ரெண்டடிக்கு மேல் உள்ளுக்குள் பெரிய குழி தெரிந்தது.
"இப்போ தான் ண்ணா உள்ளே போச்சு. அதுக்குள்ள இவ்ளோ தூரம் போயிருச்சா?"
அவர் வேகமாக படுத்து உள்ளே கையை நுழைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் குழிக்குள் இறங்கியது. அவ்வளவு நேரம் அவர் எடுத்துக்கொண்டதைவிட அதிக நேரம் எடுத்தார்.
ஒருவேளை அவருக்கு மூச்சு திணருகிறதோ என பயந்தேன். அவரின் கால் மட்டும் தான் மேலே இருந்தது. முட்டிக்கு மேலே மொத்த உடலும் குழிக்குள் சென்றுவிட்டது.
பேசாமல் அமைதியாக இருந்திருக்கலாமோ என நினைத்தேன்.
சில நிமிடங்கள் கழித்து ஒரு கையை மட்டும் வெளியே வளைத்து ஊன்றி எழுந்து உட்கார்ந்தார்.
கையில் பெரியதாக மஞ்சள் நிற நண்டு இருந்தது. நான் இவ்வளவு நேரம் பார்த்ததை விட ரொம்ப பெருசு.
"இது என்ன நண்டு ண்ணா?"
"இதுவும் வெள்ளி தான். பெருசான மஞ்ச கலருல மாறிடும். இது மீனையே புடிச்சு சாப்ட்டுடும். இதுக்கு முன்னாடி மூணு நாலு தடவ இத புடிச்சுருக்கேன்"என சொன்னார்.
அதன் கொடுக்குகளும் பயங்கரமாக இருந்தது. அவர் எப்பொழுதும் போல கட்டை விரலில் அழுத்தி அதற்கு மூக்கு குத்தினார்.
எனக்கு அழைப்பு வந்துவிட்டது. திரும்பி பார்த்தால் தூரத்தில் குட்டி குட்டி மனிதர்கள் வெளிச்சத்தில் தெரிந்தனர்.
"ண்ணா நான் போயிட்டு வர்றேன். எல்லா சனிக்கிழமையும் இருப்பீங்களான?"
"இருப்போம். ஏழு மணிக்கு அந்தா தெரிது பாரு கோவிலு. அங்க இருந்து ஆரம்பிப்போம். எப்போ வந்தாலும் பாக்கலாம்" என்று டாட்டா காட்டினார்.
நானும் கைகாட்டிவிட்டு வெளிச்சத்தை நோக்கி மணலில் நடந்தேன்.
ஒரு இரவில் நண்டுகளுடன் இப்படி ஒரு பயணம் வாய்த்தது எனக்கு பேரனுபவம்.
தூரத்தில் போலீஸ் ஜீப்பில் சைரன் வெளிச்சம் தெரிந்தது. திருவான்மியூரில் அந்த ஜீப் அங்கு வந்து நின்றால் பன்னிரண்டு மணி ஆகிவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்த முறை சனிக்கிழமை இரவு திருவான்மியூர் கடற்கரைக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக டார்ச்சை எடுத்துக்கொண்டு அந்த குல்லாக்கார அண்ணன் பின்னால் நண்டு பிடிக்க சுற்றிக்கொண்டிருப்பேன்.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment