ஞாயிறு மதியம் T-நகர் செல்ல தாம்பரத்தில் ரயில் ஏறினேன்.
அவசரத்தில் விற்பனையாளர்களின் பெட்டியில் எறிவிட்டேன். அது எப்படி இருக்குமென்றால், சுற்றியும் திண்ணை போல மர இருக்கையும் நடுவில் காலி இடமும் இருக்கும். சில்லறை வியாபாரிகள் விற்பனை பொருட்களை கொண்டு செல்ல ஒவ்வொரு ரயிலிலும் இந்த பெட்டி இருக்கும். நான் பெரும்பாலும் இதில் ஏறுவதை தவிர்த்துவிடுவேன். ஏனென்றால் ஒன்று இதில் ஜன்னலுக்கு முதுகை காமித்து உட்கார வேண்டியதால் வெளியே வேடிக்கை பார்க்க முடியாது. இன்னொன்று கூட்டம் அதிகமானால் உள்ளேயும் மனிதர்களை வேடிக்கை பார்க்க முடியாது. மொத்தத்தில் வேடிக்கை பார்க்க முடியாதது தான் பிரதான பிரச்சனை.
ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் இரவு காலியான பெட்டியில் ஏறிய பொழுது உள்ளே கதவோரத்தில் டோலக் எல்லாம் கையில் வைத்துக்கொண்டு நான்கு பசங்க எதிர் எதிராக தரையில் வழியை மறைத்து உட்கார்ந்திருந்தனர். எல்லோரும் வித்யாசமான நிறத்தில் சட்டைகளும், கைகளிலும் கழுத்திலும் பல நிறங்களில் ரப்பரையும், கயிறு, ஜெயின்களையும் போட்டிருந்தனர். முடியை வேறு வெறுவிதமாக வெட்டியிருக்க பார்த்தவுடன் நிச்சயமாக சொல்லிவிடலாம் "புள்ளிங்க". நேராக இப்படியான பசங்களை பார்ப்பது அது தான் முதல் முறை.
ஒருவன் பாட ஒருவன் டோலக்கை அடிக்க மற்ற இருவரும் கைகளை தட்டிக்கொண்டு கோரஸ் பாடிய படி வந்தார்கள். முதலில் தன் நண்பனை காதலிக்க வேண்டாம் என்பதாக ஒரு பாட்டு பாடினான். ரயில் படியில் நிற்பவனை பற்றி அங்கே நிற்க கூடாது, வீட்டில் அம்மா காத்திருப்பாள் என்பதாக ஒரு பாட்டு. குடித்துவிட்டு ரயில் ஏறிய வயதான ஒருவரிடம் "நைனா இங்க வந்து உட்காரு.. உனக்கு ஒரு பாட்டு பாடுறேன் கேளு" என அவரை அருகில் உட்கார வைத்துவிட்டு குடிக்காதே என்று ஒரு பாட்டு. அந்த பெரியவரும் சிரித்துக்கொண்டே கைதட்டி ஜோதியில் ஐக்கியமானார். அடுத்து அம்மாவை பற்றி பாடினான்
"உருவம் கொடுத்த அம்மாவுக்கு கம்மல் வாங்கி தரணு
என்னை உசுரா நெனெச்ச தாயிக்கு தான் செயினு வாங்கி தரணு
.....
.....
அம்மா தாண்டா எல்லாம்
மத்தது என்னடா சும்மா
......
.....
அம்மா எனக்கு வேணும்
இல்லாட்டி கண்டது எல்லாம் தோணும்
......
உருவம் கொடுத்த அம்மாவுக்கு கம்மல் வாங்கி தரணும்"
அவன் தோன்றியது எல்லாம் பாடிக்கொண்டிருந்தான். பாட்டின் இடையிலேயே "உங்க நண்பன் ரமேஷ் சொல்றேன் கேட்டுக்கோ" என தன் பெயரையும் பதிய வைத்துக்கொண்டான்.
ஏதோ பெண்களை பற்றி ஒரு பாட்டு பாடிவிட்டு
"அக்கா கோச்சுக்காதேக்கா.." என அங்கே சுண்டல் விற்க ஏறி இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அக்காவிடம் மன்னிப்பு கேட்டான்
உடனே அந்த அக்கா "நான் ஒண்ணுமே சொல்லலேயேடா" என்று சிரித்துவிட்டு கூடையுடன் இறங்கினார்.
டக்கென பார்ப்பவர்களை எல்லாம் அவனின் பாட்டில் கதாபாத்திரங்களாக்கிவிடுவது ஆச்சரியமாக இருந்தது. அங்கே ஒருவர் கூட முகம் சுளிக்கவில்லை. அவர்களும் அந்த டோலக்கும் அவர்களின் அசால்ட்டான போக்கும் மற்றவர்களின் இறுக்கமான மனநிலையை கொஞ்சம் தளர்த்தியது. அன்று ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.
இப்பொழுது இந்த மதிய ரயிலில் அப்படியாக என்னை பாட்டு பாடி அழைத்துச் செல்ல யாரும் இல்லை. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வேறு பெட்டிக்கு மாறினால் இடம் கிடைக்குமா என தெரியாது. சரியென உட்கார்ந்திருந்த பொழுது அடுத்த நிறுத்தத்தில் இரண்டு சிறுமிகள் அவர்களின் பெற்றோருடனும் தாய் மாமாக்களுடம் ஏறி என்னருகே வந்து நின்றனர்.
அந்த சிறிய அக்கா தங்கைகளின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். இருவரும் பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டனர். அதில் அக்கா "ஐ.. first time train.. happyஆ இருக்குல" என்று தங்கையும் அப்பாவையும் பார்த்து சிரித்தாள். எல்லோரும் சிரித்தனர். முதல் அனுபவம் ஏற்படும் குழந்தைகளின் முகத்தை பார்ப்பது பேரனுபவம். அதை நீங்கள் எந்த முகத்திலும் ஏன் அந்த குழந்தையின் முகத்திலேயே கூட திரும்ப அந்த உணர்வை பார்க்க முடியாது. தங்கை அவளின் மாமாவின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.
ரயில் புறப்பட்டது
10 நொடி அந்த சந்தோஷம் அவர்களின் முகத்திலிருந்தது. அதன் பிறகு அக்கா ஆரம்பித்தாள்.
முகத்திலிருந்து
"என்ன fastஆ வே போகல"
"போகும் இரு"
கொஞ்சம் வேகமாக சென்றது.
தங்கை சொன்னால் "மெதுவா தான் போகுது"
அப்பொழுது இன்னொரு ரயில் எதிர் திசையில் வந்து எங்கள் ரயிலை கடந்தது.
"அந்த trainல போலாம். அதுதான் speedஆ போகுது"
"இதுவும் அப்படி தான் போகுது. உள்ள இருக்கறதால தெரியல"
அக்கா சிணுங்கினாள்.
பிறகு கொஞ்ச நேரம் அமைதியாக வந்தனர்.
நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நான் எழுந்தேன். அந்த குழந்தையின் அப்பா திடுமென தாவி வந்து என் இருக்கையை பிடித்துக்கொண்டு
"யாருக்கு சீட்டு வேணுமோ வாங்க" என்கிறார். உடனே இரண்டும் குதித்து வந்து மடியில் எறிக்கொண்டன.
நாம் அதிகமாக சினிமாவிலும் டிவியிலும் இந்த உலகத்தை பார்த்து அலுத்துவிடுகிறோம். அதே விஷயத்தை நேரில் பார்க்கும் பொழுது நாம் நினைத்ததற்கு முரணாகவோ அல்லது கொஞ்சம் எதிர்பார்த்ததை விட கீழாகவோ இருக்க ஏமாற்றமடைகிறோம்.
நான் முதல் முதலில் பணிமலையை பார்க்க போகிறோம் என்ற குதூகலத்தில் சென்று அதை நேரில் பார்க்கும் பொழுது சப்பென இருந்தது.
நாம் அனைத்தையும் காட்சிகளின் வழியே தகவல்களை பெற ஆரம்பித்துவிட்டோம். இனிமேல் பார்வை வழியே ஏற்படும் புது அனுபவம் என்பது இன்றைய இணைய மனிதர்களுக்கு நிகழ வாய்ப்பேயில்லை.
இந்த ரயில்நிலையத்தின் அவசரமான மனிதர்களுக்கு நடுவே நான் தினமும் இரண்டு குடும்பங்களாவது இங்கு இருக்கும் நகரும் படிக்கட்டை புதிதாக பார்த்து போலாமா வேண்டாமா என நிற்பவர்களை பார்க்கிறேன். எப்படியோ முடிவெடுத்து மொத்தமாக அதில் குதித்து ஏறி ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து, தாங்கி பிடித்து, கூச்சலிட்டு, சிரித்து, பயந்து திரும்பவும் சிரித்து அந்த மொத்த குடும்பமும் மேலே சென்றடைந்ததும் திரும்பவும் பக்கத்தில் இருக்கும் சாதா படிக்கட்டின் வழியே எல்லோரும் சிரித்து பேசி கீழே நடந்து இறங்கி செல்வார்கள்.
அவர்கள் பேரதிர்ஷ்டசாலிகள்.
பிரபு மித்ரன்
No comments:
Post a Comment