Tuesday, 28 February 2017

தாலி என்ற நாய் பெல்ட்

அன்று காலையில் எழும் பொழுதே வீட்டு வாசலில் எதோ சத்தம் கேட்டது.
வெளியே சென்று பார்த்தால் ஒரு ஆணும் பெண்ணும் ரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

புருஷன் பொண்டாட்டி சண்டை.

அவர்களின் அந்த வாக்கு வாதத்தில் இருந்து அது பணம் சம்பந்தப்பட்ட சண்டை என தெரிந்தது.

"உன் சங்காத்தமே வேணாம்னு தானே நானும் என் புள்ளையும் தனியா வந்துட்டோம்.. இன்னும் ஏன் எங்க நிம்மதிய கெடுக்குறே..?? என் 'போன' குடு"  என்றவாறே எட்டி அவன் கையிலிருந்த செல் போனை பிடுங்க கையை கொண்டு சென்றாள். அவன் கையை அவளுக்கு எட்டாமல் கையை இழுத்துக் கொண்டு அவளை முழங்கையால் முட்டி தள்ளினான்.

"போன் எல்லாம் தர முடியாது. நீ ஊர் எல்லாம் கடன் வாங்குவே..எல்லாரும் என்கிட்ட பணத்தை திருப்பிக் கேக்குறாய்ங்க.. பணம் குடுத்துட்டு ஃபோன வாங்கிட்டு போ" என்றான்.

"நான் கடன் வாங்குறேன்..திருப்பி குடுக்குறேன்..குடுக்காம இருப்பேன்.. நீ யாரு கேட்க..என் போன குடு, நான் போறேன்"
அவள் அவனின் சட்டையை பிடித்து இழுக்க.. அவன் அவளை பிடித்து தள்ள இருவரும் பக்கத்திலிருந்த சாக்கடையில் விழுந்தனர்.
உடனே அவள் வெளியே வந்துவிட்டாள். அவன் கொஞ்சம் தடுமாறி மேலே ஏறவும் அவள் அவனின் கையிலிருந்த செல் போனை பிடுங்கி விட்டு ஓட கால் எடுக்கும் பொழுது அவன் அவளின் காலை பிடித்து இழுக்க முன் பக்கமாக விழுந்தாள். செல் போன் தெறிச்சு போய் விழுந்தது.
அவன் சென்று எடுத்துக் கொண்டான்.
விழுந்தவள் விறுட்டென எழுந்தாள்.

கையை அவனை நோக்கி நீட்டி "என் 'போன' குடு"

"காசு குடுத்துட்டு ஃபோன வாங்கிக்கோ"

"இப்போ குடுக்க போறியா.. இல்லையா? மரியாதையா குடு"
அவன் எதுவும் பேசவில்லை.

அவள் ஒரு நொடி அவனின் கண்ணை  எரித்து விடுவது போல் பார்த்தாள்.
சற்றும் யோசிக்காமல் தன் கழுத்திலிருந்து தாலி கயிறை கழற்றி அவன் மேல் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.
சுற்றி வேடிக்கை பார்த்த மொத்த கூட்டமும் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தது.
அந்த மஞ்சள் துண்டு கூட இல்லாத வெறும் கயிறு அவன் நெஞ்சில் பட்டு கொஞ்சம் தள்ளி விழுந்தது.
என்னமோ தன்னுடைய உயிரே குதித்து உருண்டு விழுவது போல அவன் ஓடிச் சென்று அந்த கயிறை எடுத்து சுருட்டி பத்திரமாக பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அவள் போன திசைக்கு எதிர் திசையில் தலையை குனிந்து கொண்டு அவசர அவசரமாக நடந்தான்.

எனக்கு அவள் அதை கழற்றி எரிந்தது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. என் ஆச்சரியம் எல்லாம் அவன் எதற்காக அதை அப்படி ஓடி சென்று எடுத்து வைத்துக் கொண்டான் என்பது தான்.
அதில் தங்கமோ.. வேறு எதுவோ அந்த கயிறில் இல்லை. வெறும் கயிறு.

எனக்கு என்னவோ தாலி என்பது பெண்களை விட ஆண்களுக்கே முக்கியமாய் இருப்பதாக தோன்றுகிறது.

அந்த நிமிடம் யாருக்கு எப்படி இருந்ததோ தெரியாது. எனக்கு அந்த இடத்தில் அளவிட முடியாத சுகந்திரத்தை அனுபவித்த உணர்வு. கழற்றி வீசி விட்டு அவள் சிங்கம் போல ரோட்டில் நடக்க அவனோ தலையை குனிந்து வேக வேகமாக கயிறை தூக்கிக்கொண்டு  ஓடினான்.

எப்படி முஸ்லிம் பெண்கள் பர்தாவிற்குள்  அடைபட்டிருக்கிறார்களோ அதே போல இங்கே தாலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தாலியை பெண்கள் எப்படி நினைக்கிறார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் ஆண்கள் வாங்கும் பைக்கில் எப்படி தன் பெயரை எழுதி 'இது என்னோடது' என ஊருக்கு காட்டுகிறார்களோ அப்படி தான் தாலியை கட்டி இந்த பொருள்(பெண்) என்னுடையது என காட்டப்படுகின்றது.

அதற்கு கலாச்சார சாயம் பூசினால் நீங்களும் பதிலுக்கு புருஷன் கழுத்தில் தாலி கட்டி விடுங்கள். இருவரும் தாலியும் கழுத்துமாக சுற்றுங்கள். Equalityஐ அங்கிருந்தே ஆரம்பியுங்கள்.

முன்பு ஆண்கள் மெட்டி அணிந்திருப்பார்களாம்..நீளமாக கூந்தல் வளர்த்திருப்பார்களாம். காதில் கடுக்கன் போட்டிருப்பார்களாம். இன்று எங்களால்  அதை எல்லாம் உடைத்தெரிந்து விட்டு வர முடியும் என்றால் பெண்களாலும் அதை எல்லாம் மீற முடியும் தானே!

இன்னும் அதை புனிதம் என பெண்களே பேசினால் வீட்டு நாய் தன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் பெல்ட்டை தனக்கு கிடைத்த மரியாதையாக நினைப்பது போல தான். அது மரியதைக்கு போடப்பட்ட பெல்ட் இல்லை என்பது அதன் எஜமானனுக்கு மட்டுமே தெரியும்.

நாதஸ்வரம்

இன்று காலை 5 மணி
அரசு பேருந்தில் போய்க் கொண்டு இருந்தேன்.
பெரும்பாலும் அந்த நேரத்தில் ஏதாவது கந்த சஷ்டி கவசம் போன்ற ஆன்மீக பாடல்களோ அல்லது 80 களில் வந்த இளையராஜா பாடல்களையோ தான் பேருந்துகளில் ஒலிக்க விட்டிருப்பார்கள்.
ஆனால் இதில் எதோ வித்தியாசமாக  நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருந்தது.
தமிழனின் வாத்தியம்.
எனக்கு திடீரென ஒரு எண்ணம்.
நாம் இந்த நாதஸ்வர இசையை ரசித்தால் என்ன?
நல்ல இசை நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்லுமாமே!!!
இன்னைக்கு எப்படியாவது கடவுளை பார்த்து விட வேண்டும் என நினைத்து அதுவரை நான் நோண்டிக்கொண்டிருந்த செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு கண்களை மூடி அமர்ந்தேன்.

ஆஹா..
நாதஸ்வர இசை அப்படியே என்னை ஆட்கொண்டது.
அந்த இசையை பின் தொடர்ந்து என் மனம் போய் கொண்டு இருக்கையில்.. என்ன ஆச்சரியம்...!! கண் முன்  மெதுவடை ஒன்று தோன்றியது.
நன்றாக உற்று கவனித்தேன்..
ஆம்
மெதுவடையே  தான்.
அதற்கு பிறகு அது மறைந்து ஊத்தாப்பம் வந்தது.
அப்புறம் மசால் தோசை.
மினி இட்லி.
ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது.
நான் பதறிப்போய்க் கண்களை திறந்து கொண்டேன்.
என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை.!!?
மறுபடியும் கண்களை மூடி நாதஸ்வரத்தை பின் தொடர்ந்தேன்.
திரும்பவும் மெதுவடை..மசாலா தோசை..ஊத்தாப்பம்.. இந்த முறை அனைத்தும்  வாசனையுடன் வேறு வந்தது.
கண்களை திறந்துவிட்டேன்.

அடடா!!!
நாதஸ்வர இசை என்னை கடவுளிடம் அழைத்துச் செல்வதற்கு பதில் கல்யாண மண்டபத்திற்கு கூட்டி சென்றுவிட்டது.
நாம அதை எல்லாம் அங்க தான கேட்றுக்கோம்.
கச்சேரி முடிந்ததும் பந்தி போட்டு விடுவார்கள். அதனால் நாதஸ்வரத்திற்கும் மெதுவடைக்கும்  என் மூளையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்.

ஒரு பிரபலமான உளவியல் சோதனை  இருக்கிறது.
ஒரு நாயை சிறு அறையில் கட்டி வைத்து விடுவார்கள். அதன் வாயில் உமிழ் நீர் சுரக்கும் அளவு எடுக்க ஒரு குழாய் பொறுத்தப்பட்டிருக்கும். தினமும் ஒவ்வொரு வேளையும்  ஒரு மணி அடிக்கப்படும். உடனே வெளியே இருந்து ஒரு ஆள் தட்டு நிறைய மாமிசத்துடன் உள்ளே வந்து நாய்க்கு சாப்பிட கொடுப்பான். நாய்க்கு மாமிசத்தை பார்த்ததும் உமிழ் நீர் சுரக்கும். அளவு எடுத்துக்கொள்வார்கள்.
ஒரு வாரம் இது தொடர்ந்து நடக்கும்.
மணி அடிக்கும்.
மாமிசம் வரும்.
நாய்க்கு உமிழ் நீர் சுரக்கும்.
ஒரு வாரம் கழித்து ஒரு சோதனை செய்தார்கள்.
மணி அடிக்கப்பட்டது ஆனால் மாமிசம் வர வில்லை.
இருந்தாலும் ஒவ்வொரு முறை மணி அடிக்கும் பொழுதும் அந்த நாய்க்கு உமிழ் நீர் சுரந்தது.
மாமிசம் - உமிழ் நீர் என்பது மாறி
மணி - உமிழ் நீர் என்றானது.
இதை கண்டிஷனல் ரெஸ்பான்ஸ்(conditional response) என்பார்கள்.

அதே போல இங்கு நாதஸ்வரம்-கல்யாண சாப்பாடு.
சேம் கண்டிஷனல் ரெஸ்பான்ஸ்.

சோ...  இசை நம்மை அதற்கு முன் அதை எங்கு கேட்டோமோ அங்கு தான் அழைத்துச் செல்லும்.

கடவுள பாக்கனுமாம்லே.!

அரசியல் பேசு

அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்பொழுது என்னால் அதை அமைதியாக கவனிக்க முடிகிறது.

அரசியல் புரியாதவர்கள் அரசியல்  பேசும்போது தான் வாய்லயே மிதிக்கனும்னு தோணுது.

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள பேசுகிறார்கள்.
புரியதவர்களில் பலர் அதற்கு முயற்சி கூட எடுப்பதில்லை.

ஆனால் ஒன்று,
புரிகிறதோ தெரிகிறதோ எப்படி இருந்தாலும் இங்கு அனைவரும் கண்டிப்பாக அரசியல் பேச வேண்டும்.

கல்லூரி முடிந்த ஒரு சில நாட்கள் கழித்து நண்பர்களை சந்தித்த பொழுது ரொம்ப நேரம் அரசியல் கட்சிகளை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஒரு நண்பன் சொன்னான்  "என்னங்கடா நாம எல்லாம் பெரிய பசங்க ஆகிட்டோமா? இப்டி  பாலிடிக்ஸ் பேசிக்குறீங்க!! வேற ஏதாவது பேசுங்கடா.. எனக்கு வயசாயிடுச்சோனு பயமா வருது" என்று. நாங்கள் சிரித்துக்கொண்டு சினிமாவை பற்றி எங்கள் பேச்சை மாற்றினோம்.

நான்கு வருடங்களாகிவிட்டது..

நேற்று மாலை இரண்டு பள்ளி மாணவிகள் ஏதோ பேசிக்கொண்டே சைக்கிளில் என்னை கடந்து சென்றனர்.
அவர்கள் பேசிக்கொண்டதில் ஒரு வார்த்தை மட்டும் தெறித்து வந்து காதில் விழுந்தது

"சசிகலா"

#அரசியல்_பேசு

ஹிட்லரின் காதலர் தினம்

காதலர் தினம் என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது ஹிட்லர் தான்.

சர்க்கரை பொங்கலுக்கு வடை கறியா?

ஹிட்லரை போன்ற ஒரு காட்டுமிராண்டியை வரலாறு பார்த்திருக்காது.  பதினைந்து லட்சம் குழந்தைகள் உட்பட ஆறு மில்லியன் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த ராட்சஷன். இரண்டாம் உலகப்போரின் கதாநாயகன் என்று வர்ணிக்கப்படும் ரத்த வெறி பிடித்த
சைக்கோ.

மிருகம்..
கிறுக்கன்..
அயோக்கியன்..
முட்டாள்..

மனித இனம் இருக்கும் வரை அவனை திட்டிக்கொண்டே இருக்க அவ்வளவு காரணங்கள் நமக்கு இருக்கிறது.

அதை எல்லாம் தாண்டி எனக்கு அவன் வாழ்வில் பிடித்த ஒன்று உள்ளது என்றால் அது இறப்பதற்கு முந்தைய அவனின் கடைசி 36 மணி நேரங்கள்.

ஈவா ப்ரான் என்ற பெண்ணுடன் ஹிட்லருக்கு இருந்த காதலை உலகம் அறிந்து கொண்ட அந்த 36 மணி நேரம்.

ஈவா தனது பதினேழாம் வயதில் ஹிட்லரை சந்தித்திருக்கிறாள். இருவருக்கும் 23 வயது வித்தியாசம். ஹிட்லரை போன்ற ஒருவனை இவ்வுலகில் ஒரு உயிர் பைத்தியமாய் காதலித்திருக்கும் என்றால் அது ஈவா மட்டுமாக தான் இருக்க முடியும். அவனுக்காக சாகும் அளவுக்கு அவள் பைத்தியக்காரி.

துப்பாக்கியால் தன் நெஞ்சில் தானே சுட்டு தற்கொலைக்கு முயன்று ஹிட்லரின் கவனத்தை அவள் பக்கம் திருப்பியிருக்கிறாள்.

ஹிட்லர் தன்னுடன் நேரம் செலவிடவில்லை என்பதற்காக தூக்க மாத்திரை சாப்பிட்டு சாக முயன்றிருக்கிறாள்.

16 வருடம் பழகியிருந்தாலும் இந்த உறவை    வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தாா் ஹிட்லர். அதற்கு காரணம் மக்களிடம் அவருக்கு இருந்த பிம்பம். தனக்கு துணை என்ற ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால் தான் உருவாக்கி வைத்கிருக்கும் அந்த பிம்பம் சேதமடைந்து விடும் என பயந்தாா். திருமணமாகதவராக இருப்பது தான் தனது இந்த அரசியல் செல்வாக்குக்கு சரி என நம்பினார். அவளும் அதை எதிர் பார்க்கவில்லை.

போர் உச்ச கட்டத்தை அடைந்த பொழுது ஈவாவை அழைத்த ஹிட்லரின் நண்பர் அவளை தப்பித்து செல்ல வற்புறுத்தினார். அதற்கு ஈவா "ஹிட்லரை தனியா சாக விடுவேன்னு நினைக்குறியா? கடைசி நொடி வரை நான் அவர் கூட தான் இருப்பேன்" என்றாள் உறுதியாக.

எதிரி படைகள் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்க கண்டிப்பாக தோற்றுவிடுவோம் என்ற இக்கட்டான நேரத்தில் ஹிட்லர் தன் வாழ்நாள் முழுவதும் கட்டி உருவாக்கிய அந்த அரசியல் பிம்பம் பற்றி கவலைப்படாமல் அன்று அந்த முடிவை எடுத்தான்.
அந்த முடிவு தான் அவனுடைய ரத்தம் படிந்த சரித்திரத்தில் கடைசி புள்ளியை மட்டும் ஆச்சரியப்படும்படி அழகாக முடித்து வைத்துவிட்டது. ஏப்ரல் 28, 1945 ஆம் தேதி முடிந்து நடு இரவில் ஹிட்லர் ஈவாவை திருமணம் செய்து கொண்டான். 

திருமணம் முடிந்து அடுத்த 36 மணி நேரம் கழித்து 30 ஏப்ரல் மதியம் 3:30 மணிக்கு துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த சிறிய அறைக்குள் நுழைந்தனர். உள்ளே ஈவா சைனைடு சாப்பிட்டு இறந்து கிடக்க பக்கக்தில நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஹிட்லரின் உடல்.

எதிரி படையிடம் பிரேதம் கூட கிடைத்துவிடக்கூடாது என இரண்டு உடல்களையும் உடனே தூக்கி வந்து ஒன்றாக எரிக்க ஹிட்லரும் ஈவாவும் இரண்டரை மணி நேரம் சேர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து காற்றோடு காற்றாக தங்கள் காதலை கலந்து ஜெர்மனி முழுவதும்  வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

உலகின் மிக மோசமான சர்வாதிகாரி தனது முடிவை இவ்வளவு அழகாக முடித்திருக்கக்கூடாது. ❤

குந்திதேவியின் வாக்குமூலம்

குந்திதேவியின் வாக்குமூலம்

பெயர்: குந்திதேவி(மகாபாரத கர்ணனின் தாய்)
குற்றம்:  தனக்கு பிறந்த குழந்தையை கூடையில் வைத்து ஆற்றில் அனுப்பியது.

வாக்குமூலம்:
ஒரு நாள் குந்திபோஜ மகாராஜா தன் மகள் குந்திதேவியை அழைத்து துர்வாசர் என்ற அப்போதைய மிக பிரபலமான முனிவருக்கு பணிவிடை செய்யுமாறு சொல்லிவிடுகிறார்.
குந்திதேவியும் முனிவருக்கு கண்ணும் கருத்துமாக அவர் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து கொடுக்கிறாள். ஒரு நாள் வேள்வி முடிந்த பிறகு குந்திதேவியை அழைத்து அவளின் பணிவிடைகளில் தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதற்கு எதாவது வரம்(!) தருவதாகவும் சொல்லி மந்திரத்தை சொன்னாராம்.
குந்திதேவியோ விளையாட்டுப் பெண் அல்லவா!!
அவள் உடனே அந்த மந்திரத்தை சோதித்து பார்க்க விளையாட்டாக சூரியனை வேண்டி மந்திரத்தை உச்சரிக்கவும் உடனே சூரிய பகவான் அவள் முன்னாள் தோன்றி அவரின் அருள் ஒளி(!) அவள் மீது பாய உடனே கவச குண்டலத்துடன் கதிரவன் போன்ற சிசுவை பெற்றுவிட்டாள்.
உடனே “அய்யகோ.. நான் கன்னி அல்லவா?” என்று கதறியிருக்கிறாள் குந்திதேவி,
அதற்கு சூரிய பகவான் “கவலைப்படாதே குந்தி. நீ உச்சரித்த மந்திரத்தின் சக்தியால் எனது பரிசுத்த ஆவி உனக்கு அளித்த மகன் அவன். அதனால் உனது கன்னித்தன்மை பழுதுபடாது” என கூறி ஆதவன் மறைந்திருக்கிறான்.
அதன் பிறகு என்ன செய்வது என தெரியாமல் குழந்தையை ஆற்றில் விட்டிருக்கிறாள் வெகுளிப்பெண் குந்திதேவி.
இவ்வாரு வாக்குமூலம் செல்கிறது.

இதில் உங்களில் யாருக்காவது கணிக்க முடிகிறதா? இந்த கதையில் ‘கல்ப்ரிட்’ யாராக இருப்பான் என்று.

எனக்கு என்னமோ ‘அவன்’ மேல தான் டவுட்டா இருக்கு. 🤔

உன் கனவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

இரண்டு நாட்களுக்கு முன் உன்னை அப்படி பார்ப்பதற்கு முன்பு வரை வலியை பார்க்க முடியாது., உணர மட்டுமே முடியும் என்று தான் நினைத்திருந்தேன்.

கழுத்து எலும்பு புடைக்க கைகள் கட்டப்பட்ட உன் உடல் வலியில் துடித்து கட்டிலை விட்டு மேலே எழுந்து கீழே விழுந்ததே!! நடுங்கிப் போய்விட்டோம்.

எங்கயோ சந்தோஷமாக பறந்து திரியும் பட்டாம்பூச்சி ஒன்று நம் கையில் வந்து அமர்ந்து உயிர்விட்டால் எப்படி இருக்கும்! அப்படி தான் இருக்கிறது எனக்கு.

கல்லூரி முடிந்து பாதியில் தொடர்பற்று போய் திடீரென எங்கிருந்தோ வந்து கடைசி ஒரு வருடம் என்னுடன் இருந்தவன் இன்று இல்லை. இதற்கு தான் சென்னையில் இருந்து இங்கு வந்தாயா !!?

இனி தினமும் நீயும் நானும் நடந்த சாலை, சாப்பிட்ட உணவகங்கள், தினமும் பயணித்த பேருந்து, நாம் மதியம் சாப்பிடும் இடம்,  சந்தித்த மனிதர்கள், உன்னிடமிருந்து நான் பிடுங்கிக்கொண்ட ஷூ, நீ தினமும் முகம் பார்க்கும் கண்ணாடி என என்னை சுற்றி நீ விட்டுச் சென்றதை எப்படி பார்த்துக் கொண்டு நான் நடமாடுவேன்.

அழுகையாய் வருகிறது.

உனக்கு ஞாபகம் இருந்திருக்குமா? ஒரு நாள் நீ சொன்னாய் "நமக்கு வியாதி வரும் போது தான் அதுக்கு முன்னாடி வரை எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தோம்னு தெரியும்".  அப்பொழுது எனக்கு புரியவில்லை.
லட்சத்தில் ஒருத்தருக்கு தான் அந்த புற்றுநோய் வருமாமே! உனக்கு ஏன் வந்தது?

ஒரு வருடம் அந்த நோயோடு தான்  இருந்தாயா? எப்படிடா உனக்கு தெரியாம போச்சு?!!

நீ சொல்லி தான் நான் ஒழுங்காக காலையில் சாப்பிடுகிறேன். உன்னை பார்த்து தான் நிறைய தண்ணீர் குடிக்கிறேன். எந்த உணவில் என்ன சத்து இருக்கிறது என்பதை சாப்பிடும் பொழுது சொல்லுவியே! உனக்கு எப்படிடா தெரியாம போச்சு!?

"நானே வந்து சொல்கிறேன்" என்று நீ சொன்னதால் தானே உன்னை இரண்டு மாதமாக எதுவும் கேட்காமல் விட்டுவிட்டேன். இப்படி சொல்லாமலே போய் விட்டாய். நியாயமா?

இவ்வளவு சீக்கிரம் போய்விடுவாய் என்றால் ஏன் வாழ்நாள் முழுவதும் அவ்வளவு கனவுகளை அந்த விதி உன்னை சுமக்க விட்டது?

"அண்ணாமலை, பிரபு வந்திருக்கேன் டா" என்ற பொழுது கண்களை திறக்க முடியாமல் கையை தூக்கினாயே! கைகளை பிடித்த பொழுது அசைத்து என்னமோ செய்தாய். என்னிடம் என்னடா சொல்ல வந்தாய்.? இந்த பைத்தியக்காரனுக்கு புரியலையே!

உன்னை பிடித்து வைத்துக்கொள்ள நான் ஆசை படவில்லை. உனக்கு அது பிடிக்காது.

எந்த வலியும் இல்லாமல் இனி நீ சுதந்திரமாக இரு.
ஒரு பறவையை போலே நீ எப்பொழுதும் ஆசைப்பட்டது  மாதிரி  இந்த உலகத்தை தனியாக சுற்று.

உன் பொருட்களை என்னுடன் எடுத்துச் செல்ல சொன்னாய் அல்லவா! திரும்ப வந்து வாங்கிக் கொள்வாய் என்று தான் சம்மதித்தேன். இப்பொழுது நான் அதை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.
அதற்கு பதில் உனது கனவுகளை நான் எடுத்துக்கொள்கிறேன்.

நீ நிம்மதியாக உறங்கு. உன்னுடைய கனவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

RIP Anna Malai

பிரபு மித்ரன்

Related Articles